கேள்வி 22: ஏன் என்னை வழிபடு என்று இறைவன் கேட்கிறான்? அது அவனுக்கு அவசியமா?

ஏன் என்னை மட்டும் வழிபடு என்று இறைவன் கேட்கிறான் ? அது அவனுக்கு அவசியமா?

 
 ன்பிற்கு உதாரணமாக அன்னையைதான் எல்லோரும் உதாரணம் கூறுவர். அனேக தவறுகளை நாம் செய்தாலும் நம் அன்னை சிறு  புன்னகையோடு மன்னித்து விடுவாள். இறைவன் எழுபது தாய் உள்ளம் கொண்டவன் என்று அல்லாஹ் கூறுவதாக இஸ்லாம் கூறுகிறது, அப்படி என்றால் இறைவன் எவ்வளவு மன்னிக்க கூடியவன் என்று நமக்கு விளங்குகிறது. பிறந்தது முதல் இறப்பது வரை எவ்வளவோ பாவங்களை ஒவ்வொருவரும் செய்கின்றனர். என்றாலும் பாவம் செய்த அனைவரும் நரகத்திற்கு செல்வர் என்று அடித்து கூற முடியாது. ஏனென்றால் இறைவன் மன்னித்தால் அத்தனை நம் மோசமான செயல்களுக்கும் விமோசனம் கிடைத்துவிடுகிறது. 
 
இது எல்லாம் ஓகே தான் ஆனால் அவன் தன்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறும்போதுதான் கொஞ்சம் இடிக்கிறது. நாம் முடியாது என்று மறுத்தால் 70 தாய் உள்ளம் கொண்ட அல்லாஹ் சரி என்று விட்டு விட்டு போகாமல் தண்டிப்பேன் .என்று சொல்வதோடு நிற்காமல் நிரந்தரமாக் நரகத்தில் போட்டுவிடுவேன் என்று கூறும் போது, என்னது நிரந்தர நரகமா? ஏன் இறைவன் இதற்கு எல்லாம் கோபப்படுகிறான் என்று அநேகருக்கு ஆச்சரியம் வருகிறது.
 
இறைவன் தேவையற்றவன் என்று குரான் குறிப்பிடுவதை அனைவரும் அறிவர். அப்படியிருக்க என்னை மட்டுமே நீ வழி பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவை எங்கனம்? என குழப்பமாக உள்ளது என சிலர் கேள்விகளை முன் வைக்கின்றனர். நியாயமான கேள்வி போலவே தெரிகிறது என்றாலும் இதை கொஞ்சம் ஆழமாக அலசுவோம். பதிலை பார்பதற்கு முன் சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
 
உதாரணத்திற்கு நமது அன்னையை எடுத்துக் கொள்வோம். அன்னை நாம் மீது பாசமானவர்தான் என்றாலும் நாம் என்ன செய்தாலும் மன்னித்து விடுவாறா? என்று கேட்டால் இல்லை என்பதே அனைவரது பதிலாக இருக்கும். எப்படி? என்ன தான் பெற்ற தாயாக இருந்தாலும் எல்லா விஷயங்களையும் நாம் மனம் திறந்து பேசிவிடமுடியாது. என்பதை விளக்க ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

ஒரு மகனுக்கு தன்னுடைய பிறப்பில் வரக் கூடாத சந்தேகம் வந்து விட்டது என வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் தாயிடம்,சென்று நேரடியாகவே ,"என்னுடைய தந்தை உங்கள் கணவர் இல்லை என் தந்தை வேறு ஒருவர் என நினைக்கிறேன் " என்று கூறுகிறான். எல்லாவற்றையும் மண்ணித்து அரவணைக்க கூடிய அன்னை இப்போது என்ன செய்வார்? நடப்பது வேறாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.  

அப்படியே மிக மிக கருணை உள்ள அக்மார்க் தாய் என்று வைத்துக் கொண்டாலும் அவர் என்ன செய்வார்? வெட்கமடைந்த அவர் தனுடைய மகனுக்கு கண்டிப்பாக புத்தி சொல்வார். அப்படி சொல்லும் போது, வேண்டும் என்றே மகன் எதாவது காரணம் கூறி மறுத்துக் கொண்டே இருந்தால், என்ன நடக்கும்? மகன் தந்தையை மறுத்தால் அவர் தந்தை இல்லை என்றாகிவிடாது, மாறாக அந்த மகன் தன்னுடைய நடத்தையை சந்தேகப்பட்டதாகவே அவர் வருந்துவார். நாம் பெற்ற ஒரு ஜீவன் தன்னையே மறுத்து பேசும் போது அந்தே மன்னிப்பிற்கோ, அன்பிற்கோ, ஆதரவிற்கோ இடம் இருக்காது. அதற்காக கொலையெல்லாம் செய்துவிட மாட்டார், ஆனால் உங்களை அவரிடம் இருந்து விரட்டி விடமாட்டார் என்று யாரும் உறுதி கொடுக்க முடியாது.

இன்னும் பல மடங்கு அக்மார்க் தாயாக இருந்தால் ஒருவேளை அந்த மகன் திரும்பி வருவார் என காத்திருக்கலாம். ஆனால் கடைசி வரை மகன் திரும்ப வில்லை மேலும் இந்நிலையில் மரணித்து விட்டால் பிணத்தை வந்து பார்ப்பார், அழுவார், மன்னிப்பார் என்று எல்லாம் உறுதியாக சொல்ல முடியவே முடியாது. சனியன் செத்தது என்றுதான் சொல்வார். ஏன் இப்படி நடந்து கொண்டார்?

அவர் எதிர்பார்ப்பது என்ன மிகப் பெரிய விஷயமா? அது முடியாத விஷயமா என்ன? இல்லை அவர் எதிர்பார்பதை வைத்துக் கொண்டு இப்படி நீங்கள் எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியுமா? என்றால் அனைத்திற்கும் இல்லை என்பதே பதில். தாய் எதிர்பார்ப்பது உண்மையை ஏற்று கண்ணியப்படுத்தும் அழகான மனதைதான். அந்த "Recognition" என்பது பிச்சையோ அல்லது அவருக்கு தேவை என்றோ ஆகிவிடாது.

சுருக்கமாக சொல்வது என்றால் ..  "எல்லாவற்றிற்கும் ஒரு அளவுண்டு"
ஆம். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், யாரை வேண்டுமானாலும் தகப்பன் என்று சொல்லுவேன் என்று சொல்வது வரம்பு மீறுதலை காட்டுகிறது.  இது உண்மையை மறுக்கும் செயல்... திமிர் தனம் என்று கூட சொல்லலாம்... சரி இப்பொழுது நமது கேள்விக்கு வருவோம். 70 தாயுள்ளம் உள்ள இறைவன் என்னையன்றி வேறு கடவுளை எடுத்துக் கொண்டால் தண்டிப்பேன் என்று கூறுவது சரியா? தவறா? இறைவன் ஏன் இவ்வளவு சீரியஸ் காட்டுகிறான்?




எல்லா படைப்புகளும் படைத்த இறைவனும் தன்னை விட்டு விட்டு இல்லாத ஒன்றை இறைவனாக எடுத்துக் கொண்டு அதற்க்கு வழிபடுவதை கண்டு வெட்கமடைகிறான், தன்னை புறக்கணிப்பதை அவன் விரும்பவில்லை அதனால் மனிதர்களுக்கு இப்படி செயாதீர்கள் என்று அறிவுறுத்தவும் செய்கிறான். இறைவன் இவ்வாறு எதிர் பார்ப்பது  நம்மால் பூர்த்தி செய்ய முடியாத ஒன்றா? இல்லை. அல்லது இறைவன்  "பிச்சை" கேட்கிறான் என்று அர்த்தம் கொள்ளலாமா? இல்லவே இல்லை. அல்லது  இறைவன் நம்மிடம் தேவை உடையவனாக இருக்கிறான் என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா? இவை அனைத்திற்கும் பதில் "இல்லை, இல்லை, இல்லை" என்பதுதான். 
 
நமது அன்னை நம்மை பெற்றெடுத்தாள், உணவு ஊட்டினாள், வளர்த்தால், அவளுக்கே நாம் தரவேண்டிய கண்ணியத்தை இம்மியும் குறைக்காமல் கொடுக்க வேண்டியிருக்கும் போது, உண்மையில் அவளையும், நம்மையும், இந்த அண்ட சராசத்தையும் நமக்காக படைத்த இறைவனிடம் "கணக்கே இல்லாத அளவு" முறையாக நடக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? எப்படி அந்த அன்னை தனது கண்ணியத்தை விரும்புகிறாளோ அவளை விட கண்ணியத்தில் கணக்கே கொள்ளமுடியாத இறைவனுக்கு இழுக்கை ஏற்படுத்த முயலுதல் எப்படி முறையாகும்? படைத்த இறைவனும் விரும்புவது,  அது அவன் உரிமை, அது அவனுக்கு நாம் செய்யும் கடமை. இது தேவை என்றோ, பிச்சை என்றோ பொருள் கொள்ளக் கூடாது 

அவனை அல்லாத வேறொருவனை அதுவும் இல்லாத கற்பனை கடவுள்களை எடுத்துக் கொள்வது நாம் கேலி செய்கிறோம் என்பதுதான் அர்த்தம், அதனால் முடிவில் நஷ்டம் நமக்குதான் அவனுக்கு இல்லை.
 "அவனிடம் வரம்பு மீறுவதற்கும் ஒரு அளவுண்டு".

கேள்வி: குரான் 2:256 இல் "இந்த மார்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறுகிறதே என்ன அர்த்தம்?

பதில்:  மதீனாவாசிகள்(அன்சாரிகளின்) குடும்பத்தினர் தொடர்ந்து யூத மதத்திலும், கிருஸ்தவ மதத்திலும் இருந்து வந்தனர்.அதனால் அவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிர்பந்திக்கலாமா என நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடமும் கேட்கப்பட்டது. அப்போதுதான் இந்த மார்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று சொல்லக் கூடிய 2:256 வசனம் இறங்கியது. (பார்க்க: தப்சீர் இப்னு கசீர், பாகம் 1, பக்கம் 833-834 ரஹமத் அறக்கட்டளை)

இஸ்லாத்தில் இல்லாதவர்களை வரச்சொல்லி நிர்பந்திக்க கூடாது என்கிற வசனம் அவர்களுக்கு மட்டுமல்ல இன்றும் நமக்கும் பொருந்தும் என்பது முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தும் படியாகவே அருளப்பட்டது

கேள்வி: நான் பொய் சொல்லுவதில்லை, திருடுவது இல்லை, நாலவனாக இருக்கிறேன். ஆனாலும் ஆண்டவனை நான் ஏற்பதில்லை. எனக்கு ஏன்  நரகம் என்று குரானில் இறைவன் சொல்கிறான்?

பதில்:  நீங்கள் எதை  வேண்டுமானாலும் வணங்குங்கள், என்னை வணங் காவிட்டாலும் பரவா இல்லை, எப்படி வேண்டுமானாலும் போங்கள் என்று இறைவன் கூறாமல் இந்த உலகம் வீணுக்காக படைக்கப்பட்டு உள்ளது என எண்ணிக்கொண்டு இருகிறீர்களா? மேலும் என்னிடம் திரும்ப வர மாட்டேன் என எண்ணிக் கொண்டீர்களா? என கேள்வியும் வைக்கிறான்.
 
நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக இந்த உலகத்தில் இருந்தாலும், இறைவனை மறுக்கும் அநீதி செய்யும் போது அவன் சுவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பது முறையில்லை. ஆகவே நமக்கு சுவனம் வேண்டும் என்றால் அதன்  முதன்  படிக்கட்டு தான் "படைத்த இறைவனை" நம்புதல் ஆகும். அதிலேயே பெயில் ஆகிவிட்டால் அப்புறம் எப்படி அடுத்த டெஸ்ட்? ஒவ்வொரு காலகட்டத்திற்கும் என பல தூதர்களை வழி காட்ட வேண்டி இறைவன் கொடுத்துள்ளான்,  திறந்த மனதுடன் ஆராய்ந்து ஏற்றுக் கொளுத்தல் நமக்குதான் நலம்.

மன்னிக்க கூடிய அவன் வேதத்திலும் நீ எதை வேண்டு மானாலும் வணங்கு எப்படி வேண்டு மானாலும் இரு என்று சொல்ல வில்லையே..  இப்படிதான் இதைதான் வழிபட வேண்டும் என்றுதான் தெளிவாக சொல்லி இருக்கிறான். ஆக வே  சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)
 

நல்ல முடிவு பயபக்தி உடையவர்களுக்கே!!